Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்

100நாட்களை கடந்த போராட்டத்திற்கு பிறகும், பொது மக்களின் உயிரிழப்பிற்கும் பிறகும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டம் தமிழக மக்களிடையே தீவிரமடைந்துள்ளது. அதற்கு காரணம் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு. காவல் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார், மனித உயிர்களை துச்சமாக மதித்து அரசு செய்த இந்த செயலை எதிர்த்து அரசியல் காட்சிகள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்ட நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அறிக்கையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிவெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 23.03.2013 அன்று மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் தொழிற்சாலையை மூடுவதற்கு, மின் இணைப்பை துண்டிப்பதற்கும் புரட்சி தலைவி அம்மா அவர்கள் 29.3.2013 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையிட்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 8.8.2013அன்று ஆலையை இயக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013இல் மாண்புமிகு அம்மா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு விசாரணையில் இருந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் ஆலையை புதுப்பிக்க விண்ணப்பித்தது.

ஆனால் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த மாசு கட்டுப்பாடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விண்ணப்பத்தை நிராகரித்தது. அன்று முதல் ஆலை இயங்குவதற்கான மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மாசு கட்டுப்பாடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர்.

ஆலை எதிர்ப்பு குழுவினர் இன்று (28.5.2018) என்னையும், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும் தூத்துக்குடி மக்களின் கோரிக்கையும் கவனமாக தமிழக அரசால் கவனமாக பரிசீலினை செய்யப்பட்டது. இதனால் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்து அதற்கான அரசாணைகளை இன்று வெளியிட்டுள்ளது" என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர்