ads

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்

அதர்வா, நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படம் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

அதர்வா, நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படம் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. ஆனால் இந்த படத்தை சில பிரச்சனைகளால் நேற்று மாலை மட்டுமே ரசிகர்களால் காண முடிந்தது. இதனால் ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக இந்த படத்திற்கு பத்திரிகை நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பிறகு பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.  பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனான அனுராக் காஷ்யப் பணத்திற்காக பெங்களூரில் ஒரு பெண்ணை கடத்தி வைத்து சிபிஐக்கு மிரட்டல் விடுக்கிறார். சிபிஐ அதிகாரியான நயன்தாரா அவரை பிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார். அனுராக் கிஷயபின் மிரட்டலுக்கேற்ப பணத்தை தருகின்றனர்.

ஆனால் அவர் பணத்தை பெற்று கொண்டு அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். இதன் பிறகு நயன்தாராவிற்கு இது போன்று பல சம்பவங்கள் நடக்க உள்ளதாக அவரிடமிருந்து மிரட்டல்கள் வருகின்றது. அதற்கேற்ப அடுத்தடுத்து கொலைகளையும் செய்து வருகிறார் அனுராக். இவரை பிடிக்க முடியாமல் தவித்து வரும் நயன்தாராவிற்கு தனது தம்பியான அதர்வா மூலமாக மற்றொரு பிரச்சனையும் வருகிறது. மருத்துவராக இருக்கும் அதர்வா, மாடலிங் பெண்ணான ராஷி கண்ணாவுடன் பழகி காதல் வயப்படுகிறார்.

ஆனால் இருவரும் காதலை சொல்லாமலே ஒரு பிரச்சனையால் பிரிந்து விடுகின்றனர். இதன் பிறகு பெங்களூரில் இருவரும் சந்திக்கும் போது ராஷி கண்ணாவை அனுராக் கடத்துகிறார். இந்த கடத்தல் சம்பவத்தில் அதர்வா சிபிஐயிடம் சிக்கி கொள்கிறார். இதனால் நயன்தாராவிற்கு சிபிஐ துறையில் பிரச்சனைகள் நடக்கிறது. இறுதியில் இந்த பிரச்னைகள் எல்லாம் சமாளித்து நயன்தாரா அனுராக்கை பிடித்தாரா? அதர்வாவின் காதலி என்ன ஆனார்? அவரை உயிருடன் மீட்டனரா? என்பதே படத்தின் மீதி கதை.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா இந்த படத்திலும் அக்கா பாசம், சிபிஐ அதிகாரி என மிரட்டியுள்ளார். அதர்வா மற்றும் ராஷி கண்ணா காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. பாலிவுட்டில் பிரபலமான நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனரான அனுராக் இந்த படத்தின் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக அருமையாகவே நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் இசை, காதல் காட்சிகளுக்கும், த்ரில்லர் பின்னணி இசைக்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாராவின் கணவராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் டிமான்டி காலனி படத்திற்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் 'இமைக்கா நொடிகள்'. முந்தைய படத்தை போன்று இந்த படமும் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. 

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்