ads

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் போலீசாரால் தவறுதலாக சுட்டுக்கொலை

கடந்த மாதம் கலிபோர்னியாவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் நியூயார்க்கில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கலிபோர்னியாவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் நியூயார்க்கில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கருப்பு இனத்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் இவருக்கு வயது 34. ஜமைக்காவில் பிறந்த கருப்பு இனத்தவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் சமீப காலமாக வெல்டிங் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஷாகித் வாஷெல் ப்ரூக்ளின் நகரத்தின் ஒரு வீதியில் தன்னுடைய கையில் இரும்பு குழாயை வைத்து நடந்து சென்றுள்ளார். அவரை கண்ட ஒரு சிலர் அவர் கையில் துப்பாக்கி இருப்பது போல் தவறுதலாக உணர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நான்கு காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்துள்ளனர். என்னவென்று தெரியாமல் பதறிப்போன ஷாகித் வாஷெல் தன் கையில் இருக்கும் இரும்புக்குழாயை காட்ட முயன்றுள்ளார்.

ஆனால் போலீசார் தங்களை துப்பாக்கியால் சுட முயலுவதாக தவறுதலாக நினைத்து அவரை சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் ஷாகித் வாஷெல் 10 குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அருகே சென்று பார்த்த போது அது துப்பாக்கி இல்லை என காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு ரத்த வெள்ளத்துடன் அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள்ளாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது போன்ற சம்பவம் கடந்த மாதத்தில் கலிபோர்னியாவில் நிகழ்ந்தது. 22 வயதான கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபரை   கையில் வைத்திருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்து காவல் துறையினர் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்பினர் காவல் துறையினரை கண்டித்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது அடுத்ததாக கருப்பு இனத்தவரான ஷாகித் வாஷெல் என்பவர் காவல் துறையினரால் உயிரிழந்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இந்த சம்பவங்களால் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கருப்பு இனத்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பு இனத்தவர் போலீசாரால் தவறுதலாக சுட்டுக்கொலை