ads

இன்று காமெடி மனிதராக காணப்படும் உன்னத மனிதரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை

இன்று நமக்கு காமெடி மனிதராக காணப்படும் விஜயகாந்த் சினிமா வாழ்க்கையை பற்றி அறிவோம்.

இன்று நமக்கு காமெடி மனிதராக காணப்படும் விஜயகாந்த் சினிமா வாழ்க்கையை பற்றி அறிவோம்.

நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஒரு நடிகராக தமிழ் திரைத்துறையில் 1979ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 40 ஆண்டுகளாக வலம் வருகிறார். விஜயகாந்த் என்றால் குடிகாரர், காமெடியான ஒரு மனிதன், தள்ளாடும் வயதில் வீண் அரசியல் செய்து வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். இதற்கான விடீயோக்களும் ஊடகங்களில் வெளிவந்து அவரை காமெடியாக பார்க்க வைத்துவிட்டது. விஜயகாந்த், பத்திரிகையாளர், அரசியல் தலைவர் என எவருக்கும் மரியாதை கொடுக்கமாட்டார். இதுவே விஜயகாந்த் மீது ஊடகங்கள் வெறுப்புற காரணமாக இருந்தது.

ஆனால் இவர் மீது மக்களிடம் உள்ள வரவேற்பும், நடிகர்களிடம் இவருக்கு இருக்கும் மரியாதையும் எண்ணில் அடங்காதவை. இவர் நடித்து ஓய்ந்து களைத்துவிட்டாலும் இன்றளவும் இவருடைய நடிப்பிற்கும், வசனத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் தமிழ் திரையுலகிற்கு மற்றவர் தயவு இல்லாமல் சொந்தமாக, தனது திறமையினால் படிப்படியாக முன்னேறியவர். திறமைசாலிக்கு இந்த உலகில் எப்போதுமே மதிப்பு உண்டு. இதன் படி தற்போதுவரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், படிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்த வில்லை. இவர் தனது அப்பாவின் அரிசி ஆலையில் வேலை பார்த்தார். பின்னர்  சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த இவருக்கு இயக்குனர் காஜா கைகொடுத்தார். இவருடைய விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என மாற்றினார்.

இதன் பிறகு 1979-இல் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவருக்கு ஆரம்பத்தில் வெளியான படங்கள் கைகொடுக்காவிட்டாலும், அயராது உழைத்ததன் பயனாக தன்னுடைய 5வது படமான 'தூரத்து இடி முழக்கம்' படத்தின் மூலம் மக்களை கவர்ந்தார். இதனை அடுத்து இவருடைய நடிப்பில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி,நூறாவது நாள் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பால் திரையுலகை கவர்ந்தார்.

ரஜினியும், கமலும் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் போது தன்னுடைய நடிப்பால் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை கவர்ந்தார். நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து கொடுப்பவர் விஜயகாந்த். இதுவே இவர் வெகுவாக வளர காரணமாக அமைந்தது. இவருடைய 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' படம் 100 நாட்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திலிருந்து இவருக்கு கேப்டன் என்ற பட்டமும் கிடைத்தது.

இவர் திரைத்துறையில் தற்போது வரை ஏராளமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை தன்னுடைய படங்களின் மூலம் அறிமுகபடுத்தியுள்ளார். இவருடைய காவல் அதிகாரி கதாபாத்திரமும், மக்களை நல்வழிப்படுத்தும் மனிதனாக அவருடைய சிறப்பான நடிப்பு மற்றும் வசனமும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தது. இவர் தற்போது வரை 156 படங்களில் நடித்துள்ளார். இவர் 1990இல் தன்னுடைய 37வயதில் பிரேமலதா என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். இவர் விடுதலை புலிகள் இயக்கத்தில் தலைவர் கேப்டன் பிரபாகரன் மீது கொண்ட மரியாதையினால் தன்னுடைய மகனுக்கு விஜய பிரபாகர் என்று பெயர் வைத்துள்ளார்.

இவருக்கு 65 வயது ஆகிவிட்டதால் இவருடைய குரலும், உடலும் கலைப்பாகி விட்டது. ஆனாலும் தன்னால் மக்களுக்கு முடிந்த உதவிகளையும், அரசியல் எதிர்ப்புகளையும் தற்போது வரை செய்து கொண்டு தான் வருகிறார். அரசியல் மேடைகளில் இவருடைய முன்னாள் பேச்சுகளும், தொண்டுகளும் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவருக்கு குரல் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இவர் எப்போதோ முதலமைச்சராக அமர்ந்திருப்பார்.

இன்று காமெடி மனிதராக காணப்படும் உன்னத மனிதரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை