ads
இந்தியா - இலங்கை 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா
யசோதா (Author) Published Date : Dec 18, 2017 10:51 ISTSports News
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனை அடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கு 393 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்த போட்டியின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 215 ரன்கள் எடுத்தது. 216 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து விளையாடிய ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயஸ் அயர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதில் ஸ்ரேயஸ் அயர் 63 பந்துகளில் 65 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது இவருடைய 12 வது சதமாகும். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவான் தட்டி சென்றார். இந்த தொடரின் மூலம் ஷிகர் தவான் தனது 95 வது போட்டியில் 4,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி இந்திய அணியின் 8 வது தொடர் வெற்றியாகும்.
இந்திய அணியின் 2017 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் போட்டி பயணம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டில் மொத்தமாக 29 போட்டிகளில் 21 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியா சந்தித்துள்ளது. இதில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றியை அடைந்த அணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் (14) முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் (தலா 8) உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி இரு நாடுகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T20 போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி கட்டாக்கில் வருகிற 20 ஆம் தேதி நடக்கிறது.

